Islamic Centre

எமது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் வாரம் ஒரு துஆ மனனமிடுவோம் எனும் அட்டை விநியோகிக்கப்படுகிறது இதில் ஒரு வாரத்தைப் பொறுப் பேட்கும் சகோதர, சகோதரிகள் உடன் தொடர்பு கொள்ள (0094757060508)

ஸலாமுக்குப்பின் இமாம் எங்கு நோக்கி அமர வேண்டும்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஸலாம் கூறி தொழுகையை முடித்ததும் சில இமாம்கள் கிப்லாவை நோக்கியவாறும் சிலர் வலது பக்கம் திரும்பியும் சிலர் மஃமூம்களை நோக்கியவாறும் அமர்கின்றனர்.இவற்றில் சரியான முறை எது என்பதை ஹதீஸ்களின் துணை கொண்டு பார்ப்போம்.
வலது பக்கம் திரும்பி உட்காருபவர்கள் ஆதாரமாக கருதும் ஹதீஸ்கள்:
வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தனது தொழுகையில் சைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர் என்று இப்னு மஸ்வூது (ரலி) கூறினார்கள். (நூல்:புகாரி 852)
இந்த ஹதீஸில் திரும்புவதைக் குறிக்க “யன்ஸரிஃபு” எனும் அரபி வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை திரும்பிச் செல்வதைக் குறிப்பிடவே பயன்படுத்தப்படும். புகாரியில் 177,849,870,872,937 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களில் இந்த அர்த்தத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம்.சில சமயங்களில் உடல் மற்றும் முகத்தை திருப்புவதைக் குறிப்பிடவும் பயன்படுத்தப் படலாம்.
இக்கருத்து திர்மிதி தமிழாக்கத்தின் அடிக்குறிப்பிலும் எழுதப்பட்டுள்ளது. அது வருமாறு:
தொழுது முடித்து சலாம் கொடுத்தபின் தொழுத இடத்திலிருந்து எழுந்து செல்கையில் வலப்பக்கமாகவும் திரும்பலாம் இடப்பக்கமாகவும் திரும்பலாம். இது ஒரு விளக்கம். அல்லது தொழுது முடித்தபின் திக்ர் ஓதுவதற்காக திரும்பி அமர்கையில் வலப் பக்கமாகவும் திரும்பி அமரலாம். இடப் பக்கமாகவும் திரும்பி அமரலாம். (திர்மிதி தமிழாக்கம் அடிக்குறிப்பு 218 பக்கம் 500, ரஹ்மத் பதிப்பகம்)
திரும்பிச் செல்வது, திரும்புவது என்று இரு அர்த்தங்களுக்கு இந்த வார்த்தை இடமளித்தாலும் திரும்பிச் செல்லுதல் என்ற அர்த்தத்திலேயே இந்த ஹதீஸிலும் இக்கருத்தைத் தெரிவிக்கும் மற்ற ஹதீஸ்களிலும் ஸஹாபாக்களால் பயன்படுத்தப் பட்டுள்ளது.
அதாவது தொழுது விட்டு எழுந்து செல்பவர் வலது பக்கமாக திரும்பி விட்டுத்தான் தான் நாடும்திசையில் செல்ல வேண்டும் என்று நினைப்பது தவறு.தொழுது எழுந்திருப்பவர் தான் விரும்பும் பக்கமாக திரும்பிச் செல்லலாம் என்பதே இதன் கருத்து.
இப்படிச் சொல்வதற்கு இந்த (புகாரி 852) ஹதீஸே ஆதாரமாக உள்ளது. இதில் நபி (ஸல்) பல சமயங்களில் இடப்புறமாகவும் திரும்பியுள்ளதால் தொழக் கூடியவர்கள் இரண்டு விதத்தையும் செயல்படுத்த வேண்டுமென்று இப்னு மஸ்ஊத் (ரலி) வலியுறுத்துகிறார்கள்.
இதற்கு திரும்பி உட்காருவதுதான் பொருள் என்றால் தொழுகை முடிந்ததும் வரிசையில் இருப்பவர்கள் சிலர் வலது புறமாகவும் சிலர் இடது புறமாகவும் திரும்பி உட்கார வேண்டும். அப்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க வேணடியது வரும். இது முறையல்ல. இவ்வாறு யாரும் சொல்லவுமில்லை நடைமுறையுமில்லை.(யாராவது மொழிபெயர்ப்பை வைத்து தவறாக புரிந்து செயல்படுத்தினாலே தவிர) அதோடு நாம் கீழே தரவிருக்கும் தெளிவான ஆதாரங்களுக்கு முரணாகவும் ஆகும்.
அலி(ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு தேவையை நாடியவனாக நீ தொழுகையை முடித்தால் உன் தேவை வலதிலோ அல்லது இடதிலோ இருக்குமானால் உன் தேவை உள்ள திசையில் செல்! (நூல்:முஸன்னஃப் இப்னு அபீ ஸைபா, பாகம் 1,பக்கம் 339)
இந்த செய்தி தொழுது முடித்த பின் வலது, இடது புறமாக திரும்பிச் செல்வது தொடர்பான பாடத்திற்கு கீழே இடம் பெறுகிறது. ஆகவே மேற்கண்ட புகாரியின் 852 எண் ஹதீஸுக்கு திரும்பிச் செல்லக்கூடியவர்களாக இருந்தனர் என்று பொருள் கொள்வதே சரியாகும்.
இன்னொரு ஆதாரம், கழுதை வட்டமடிப்பது போல் ஒருவர் தன் தொழுகையில் வட்டமடிப்பதை அனஸ் (ரலி) அவர்கள் வெறுப்பார்கள் என்ற ஹதீஸ். இதுவும் இப்னு அபீ ஸைபாவில் மேற்கண்ட அலி(ரலி) அவர்களின் ஹதீஸ் இடம் பெறும் பாடத்தில்தான் இடம்பெற்றுள்ளது.
தொழுது முடித்ததும் ஒருவர் தன் வலது புறமாகவோ இடது புறமாகவோ திரும்பி உட்காருவது வட்டமடிப்பதாக ஆகாது. ஆனால் கிப்லாப் பக்கமோ அல்லது இடது புறமோ செல்ல வேண்டிய தேவை இருந்தாலும் முதலில் வலது புறம் திரும்பித்தான் தான் நாடிய திசையில் செல்ல வேண்டும் என்று செயல்படுவதன் மூலம் முழு வட்டமடிப்பதோ முக்கால் வட்டமடிப்பதோ ஏற்படும். ஆக ஸலாமுக்குப் பின் வலது இடது புறமாக திரும்புவது தொடர்பாக கூறப்படுவது திரும்பிச் செல்வது பற்றித்தான் என்பதைத் தெளிவாக புரிய முடிகிறது.
மேலும் மேற்கண்ட புகாரியின் 852 ஹதீஸ் அபூதாவூதிலும் இடம்பெற்றுள்ளது. அதில் கூடுதலாக, அறிவிப்பாளர்களில் ஒருவரான உமாரா(தாபிஈ) கூறுகிறார்: “இந்த ஹதீஸை செவியுற்ற பின் நான் மதீனா சென்றேன். நபி(ஸல்) அவர்களின் வீடுகள் இடது பக்கம் இருப்பதைக் கண்டேன்.” (அபூதாவூத் 878) வீடுகள் இடதுபுறம் இருந்ததால் தொழுத பின் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றுள்ளார்கள் என்று புரிய முடிகிறது.
ஸுத்தீ (ரஹ்) கூறுகிறார்கள்: தொழுது முடித்தால் நான் எப்படித் திரும்பிச் செல்ல வேண்டும் வலது புறமா? இடது புறமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் வலதுபுறம் திரும்பிச் செல்வதை நான் அதிகமாகப் பார்த்துள்ளேன் என்று பதிலளித்தார்கள். (நஸாஈ 1342).
இதற்கு விளக்கமாக இமாம் ஸிந்தீ (ரஹ்) எழுதுவதாவது:
“இந்த ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கும் (புகாரி 852, நஸாஈ 1343) ஹதீஸுக்கு முரணல்ல. இவ்வாறு சில சமயங்களிலும் அவ்வாறு வேறு சில சமயங்களிலும் செய்துள்ளார்கள் என்று இரு ஹதீஸ்களையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்.. .. .. . தகுதியான செயல் என்னவெனில் தனது தேவை இருக்கும் திசையில் திரும்பிச் செல்வதுதான். இல்லாவிட்டால் வலது புறம் சிறப்புக்குரியது. ஆனால் அது கடமையல்ல. மேலும் இங்கு வெளிப்படையாகத் தெரிவது என்னவென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு பெரும்பாலும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையிருந்தது. அவர்களின் வீடு இடது புறத்தில் இருந்தது.இதனாலேயே அவர்கள் மிக அதிகமாக இடது புறம் சென்றுள்ளார்கள்.” (ஹாசியத்துஸ்ஸின்தீ -நஸாஈ விளக்கவுரை- ஹதீஸ் 1342)
இந்த விளக்கத்தின் மூலம் மேற்கண்ட ஹதீஸ்கள் திரும்பிச் செல்வதையே குறிப்பிடுகின்றன என்பதை தெரிந்து கொள்கிறோம்.
தவறான புரிதலுக்கு காரணமாகும் மொழி பெயர்ப்பு:
புகாரியின் முதல்பாகம் 159 வது பாடத் தலைப்பு, “தொழுது முடித்த பின் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் திரும்பி அமர்ந்து கொள்வது” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலத்தை கவனித்தால் வேறு விதமாக உள்ளது. மூலத்தில் இடம்பெற்றுள்ள “இன்ஃபிதால்” எனும் வார்த்தை உட்கார்ந்தவாறு திரும்புவதையும் “இன்ஸிராஃப்” எனும் வார்த்தை திரும்பிச் செல்வதையும் குறிக்கும். அதாவது தொழுத பின்பு, கிப்லாவுக்கு நேர் எதிர் திசையை நோக்கி உட்கார்ந்தவாறு திரும்பினால் வலதுகை பக்கமாகவும் திரும்பலாம் இடதுகை பக்கமாகவும் திரும்பலாம். அதே போல் எழுந்து திரும்பிச் சென்றாலும் வலதுகை பக்கமாகவும் திரும்பலாம் இடதுகை பக்கமாகவும் திரும்பலாம்.
இப்படித்தான் ஹதீஸ் விளக்கவுரையாளர்கள் கூறியிருக்கிறார்கள். புகாரியின் பிரபல விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் எழுதியிருப்பதாவது:
ஜைன் இப்னுல் முனீர் கூறுகிறார்கள், இமாம் புகாரி இப்பாடத்தலைப்பில் இன்ஃபிதால்,இன்ஸிராஃப் ஆகிய இரு வார்த்தைகளையும் சேர்த்து பயன்படுத்தியிருப்பதற்குக் காரணம், “தொழுத இடத்தில் இருந்து கொண்டே மஃமூம்களை முன்னோக்குவதற்காக திரும்பக்கூடியவருக்கும் தன் தேவை இருக்கும் திசையை நோக்கி திரும்பிச் செல்பவருக்குமிடையில் சட்டத்தில் வித்தியாசம் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதே. “(ஃபத்ஹுல்பாரி, பா:3, ப:257)
ஆக மேற்கண்ட ஹதீஸ்கள் இமாமோ மஃமூமோ வலது அல்லது இடது புறம் திரும்பிப்பார்த்து உட்கார்ந்து கொண்டிருப்பதை குறிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டோம்.
மஃமூம்களை நோக்கியவாறு உட்காருவது:
ஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை முன்னோக்கியவாறு அமர வேண்டும் என்பதற்கே ஆதாரங்கள் உள்ளன.
ஸஹீஹுல்புகாரியில் 156 வது பாடத்தலைப்பு: “ஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.” இவ்வாறு தமிழாக்கத்தில் எழுதப்பட்டிருந்தாலும் “திரும்புவார்” என்று மொழி பெயர்க்கப்படுவதே யஸ்தக்பிலு எனும் வார்த்தைக்கு நேரடியான பொருள். இதற்குக் கீழே வரும் ஹதீஸின் கருத்துக்கும் இந்த மொழி பெயர்ப்பே ஒத்துவருகிறது. ஏனென்றால் திரும்புவார் என்று கூறுவது திரும்புவதுதான் முறை என்பதை உணர்த்துகிறது.
மேற்கண்ட தலைப்பின் கீழ் இடம் பெறும் ஹதீஸ்:
ஸமுரா பின் ஜுன்துப்(ரலி) கூறியதாவது:
“நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நேராக நோக்கித் திரும்புவார்கள்.”
இந்த ஹதீஸின் வாசகம், இவ்வாறு மஃமூம்களை முன்னோக்கி இருப்பதுதான் நபியின் வழக்கம் என்று உணர்த்துகிறது. இது குறித்து இமாம் இப்னு ஹஜர் எழுதுவது:
நபியவர்களின் வழக்கம் இவ்வாறு இருந்தது என்பது தான் ஸமுரா(ரலி) அவர்களின் அறிவிப்பில் வெளிப்படையாகத் தெரிவது. இப்படி இமாம் மஃமூம்களை முன்னோக்கியவாறு உட்காருவதற்கு சில அறிவார்ந்த காரணங்கள் கூறப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையானதைக் கற்றுக் கொடுக்கலாம் இவ்வாறு சிலரால் கூறப்பட்டுள்ளது. -இது நபியின் நிலை போன்று கற்பிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்குப் பொருந்தும்-
இமாம் மஃமூம்களை முன்னோக்கித் திரும்பியிருப்பதால் அப்போது மஸ்ஜிதுக்கு வருபவர் தொழுகை முடிந்து விட்டதென்பதை அறிந்து கொள்ள முடியும். இமாம் பழைய நிலையிலேயே இருந்து கொண்டிருந்தால் அவர் அத்தஹிய்யாத்தில் இருந்து கொண்டிருப்பதாக எண்ணம் ஏற்படலாம். இவ்வாறும் சிலரால் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜைன் இப்னுல் முனீர் கூறுகிறார்: இமாம் மஃமூம்களுக்கு முதுகைக் காட்டுவது இமாமத்தின் நிலைக்காகத்தான். தொழுகை முடிந்துவிட்டால் அந்தக் காரணம் நீங்கிவிடுகிறது. இப்போது அவர்களை முன்னோக்கி இருப்பது மஃமூம்களை விட பெருமையும் உயர்வும் கொண்டவர் என்ற எண்ணத்தை நீக்கும். (பார்க்க: ஃபத்ஹுல்பாரி, பா: 3 பக்: 252 – புகாரி 156 வது பாடத்தலைப்பின் விளக்கம்)
இங்கு இமாம் மஃமூம்களை முன்னோக்கி உட்காருவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வழக்கம் அவ்வாறு உட்காருவதுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பொதுவாக அதுதான் நபி காலத்துக்கு பின்பும் நடைமுறையாக இருந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.
புலூகுல் மராம் நூலின் விளக்கவுரையாகிய ஸுபுலுஸ்ஸலாமில் ஸன்ஆனீ (ரஹ்) எழுதியிருப்பதாவது:
மஃமூம்களுக்கு முதுகுகாட்டியவாறு கிப்லாவை முன்னோக்கி இமாம் துஆ செய்வது நபிவழியில் இல்லை. மாறாக ஸலாம் கொடுத்தால் நபி (ஸல்) மஃமூம்களை முன்னோக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்றே வந்துள்ளது. இமாம் புகாரி அவர்கள், “ஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை முன்னோக்குவார்” என்று இது தொடர்பான பாடத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்கள். அதன் கீழ் இடம்பெறும் ஸமுரா பின் ஜுன்துப்,ஜைத்பின் காலித் ஆகியோர் அறிவிக்கும் (புகாரி 845,846) ஹதீஸில், அதுதான் நபியின் நிரந்தரமான செயல்பாடு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(பார்க்க: ஸுபுலுஸ்ஸலாம் பாகம்:2, பக்கம்:201)
ஆகவே ஹதீஸ்களின் அடிப்படையில் ஸலாம் கொடுத்ததும் இமாம் மஃமூம்களை முன்னோக்கி அமருவதே நபிவழியாகும்.
அல்லாஹ் நன்கறிந்தவன்.
குறிப்பு: இக்கட்டுரையில் புகாரியைத்தவிர மற்ற நூல்களின் ஹதீஸ் எண்கள் மற்றும் பாக, பக்க எண்கள் “அல்மக்தபா அஸ்ஸாமிலா” மென்பொருள் பதிப்பில் உள்ளவை.

உள்ளமும் உளநோய்களும்

மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமுள்ள உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும் மற்றும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இவ்வடிப்படையைக் கருத்தில் கொண்டே அல்லாஹ்வும் அவனது தூதரும் தத்தம் பொன்மொழிகளை அமைத்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக. . .
அல்லாஹ் கூறுகின்றான்: “எவருக்கு உள்ளம் இருக்கிறதோ அவருக்கும், அல்லது மன ஒருமைப்பாடுடன் செவியேற்கின்றாரோ அவருக்கும் நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” (காப்: 37)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்). (அல் அஹ்ஸாப்: 5)
நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் இருக்கின்றது, அது சீர் பெறுமானால் உடம்பு பூராகவும் சீர் பெற்றுவிடும், அது கெட்டுவிட்டால் உடம்பு பூராகவும் கொட்டுவிடும், அதுவே உள்ளமாகும்.” (புகாரி, முஸ்லிம்)

உள்ளத்தின் பண்புகள்

பிரதானமாக உள்ளத்திற்கு இரு பண்புகள் உள்ளன.

1. தடம் புரளக்கூடிய தன்மை
உள்ளமானது எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. அவ்வப்போது நிலை மாறக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை பின்வரக்கூடிய ஹதீஸைப் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.
“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)
இப்படி உள்ளமானது நிலைமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனைச் சீர் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது எமது கடமையாகும். அல்குர்ஆனிலும் நபி மொழியிலும் அதற்கான பிரார்த்தனைகள் நிரம்பக் காணப்படுகின்றன.
  • அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5)
  • “இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)
  • “மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)
2. பித்னாக்களை உள்வாங்கக்கூடிய தன்மை
பொதுவாக மனித உள்ளமானது எப்போதும் பித்னாக்களை உள்வாங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு அவற்றை விட்டும் உள்ளங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எம் பாரிய பொறுப்பாகும். ஒரு மனிதன் பித்னாக்களுக்கு உட்பட்டு, அவற்றில் ஆர்வம் கொண்டு, ஈடுபாடு காட்டினால் அவனது உள்ளம் காலப்போக்கில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிய முடியாத அளவுக்கு இருளடைந்துவிடும். அதேபோன்று பிரிதொரு மனிதன் பித்னாக்களைவிட்டு ஒதுங்கி தன்னைத் தற்காத்துக் கொண்டு காரியம் அற்றினால் அவனது உள்ளம் பளிச்சிடும் வெண்ணிறத்தை அடையும் என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

உள்ளத்தின் வகைகள்

பொதுவாக உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
  1. சீராண உள்ளம்
  2. மரணித்த உள்ளம்
  3. நோய்வாய்ப்பட்ட உள்ளம்
1. சீராண உள்ளம்
இத்தகைய உள்ளமானது, மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றைவிட்டும் ஈடேற்றம் பெற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும். அத்தோடு மார்க்கத்திலிருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும் போது அதற்கெதிராகத் தன்னுடைய அபிப்பிராயத்தையோ, மனோ இச்சையையோ வெளிப்படுத்தாது இருக்கும். இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர். இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன்தராது” என்கிறான். (அஷ்ஷூஅரா: 88,89)
2. மரணித்த உள்ளம்
இவ்வுள்ளமானது சீராண உள்ளத்திற்கு மாற்றமானதாகும். மேலும், இவ்வுள்ளமானது தன்னுடைய இரட்சகனை அறியாத நிலையிலும் அவனை வணங்காத நிலையிலும் காணப்படும். அத்தோடு தனது இரட்சகனின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முழுமையாக மனோ இச்சைக்கு வழிப்பட்டதாக இருக்கும். இத்தகைய உள்ளம் குறித்து நபியவர்கள் கூறும் போது: “அல்லாஹ்வை ஞாபகிப்பவனுக்கும் ஞாபகிக்காதவனுக்கும் உதாரணம் உயிரோடு இருப்பவனும் மரணித்தவனும் ஆவார்;கள்.” (புகாரி, முஸ்லிம்)
3. நோய்வாய்ப்பட்ட உள்ளம்
இவ்வுள்ளத்தைப் பொருத்தளவில் உயிரோட்டமுள்ளதாகக் காணப்படினும் நோயுற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளத்தில் அல்லாஹ் மீது அன்பும் உறுதியான விசுவாசமும் காணப்படும். ஆயினும் தவறான விடயங்களின் பால் ஆர்வம் கொண்டாதகவும் அதில் அதிக ஈடுபாடு உடையதாகவும் இருக்கும். சில சமயம் இந்நோய் முற்றி ஒருவரை மரணித்த உள்ளம் உடையவர் என்ற நிலைக்குக் கூட தள்ளிவிடும்.

உள நோய்களின் வகைகள்

பொதுவாக உளநோய்களை இரு பெரும் பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.
  1. சந்தேகங்களுடன் தொடர்புடைய நோய்கள்
  2. இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்

1. சந்தேகங்களுடன் தொடர்புடைய நோய்கள்
இவ்வகையான நோயானது உள்ளம் தொடர்பான நோய்களில் மிகக் கடுமையானதாகும். இந்நோயானது நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் பெரிதும் தாக்கம் விளைவிக்கின்றது. இந்நோயின் காரணமாக தவறான கொள்கைகளும் கற்பனைகளும் மனதில் பதியப்படுகின்றன.
மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக இணைவைப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும், நூதன அநுட்டாளிகளையும் குறிப்பிடலாம்.
அல்பகரா அத்தியாயத்தின் 10ஆம் வசனத்தில் இந்நோயால் பீடிக்கப்பட்டவர்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகையில்: “அவர்களின் உள்ளங்களில் (சந்தேகம் எனும்) நோய் உள்ளது. எனவே, அல்லாஹ் அவர்களுக்கு நோயை அதிகப்படுத்தி விட்டான்” என்கிறான். (அல்பகரா: 10)
இந்நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு:
  • அல்குர்ஆன், அஸ்ஸுன்னாஹ்வில் இடம்பெற்றிருக்கக்கூடியவற்றிக்கு முழுமையாகக் கட்டுப்படல்.
  • அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாஹ்வையும் எம்முடைய முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே நாமும் விளங்க முற்படல்.
2. இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்
இவ்வகை நோய்களில் மனிதன் நன்றாக அறிந்து வைத்துள்ள அனைத்து வகையான பாவமான காரியங்களும் உள்ளடங்கும். அதனடிப்படையில் பொறாமை, உலோபித்தனம், விபச்சாரம், மற்றும் ஹராமான பார்வை போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.
மேலும், இத்தகைய உளநோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய உள்ளத்தைப்பற்றி அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது: “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பீர்களானால், குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ, அவன் ஆசை கொள்வான்” என்கிறான். (அல்அஹ்ஸாப்: 32)
இந்நோயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு:
  • அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் ஏவல் விலக்கல்களுக்கு முழுமையாக அடிபணிதல்.
  • எவ்வேளையும் அல்லாஹ் எம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் காரியமாற்றுதல்.
  • ஷைத்தானின் சதிவலைகளை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
  • ஒவ்வொரு பாவமான காரியத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளை கருத்தில் கொண்டு அவற்றை விட்டும் விலகிக் கொள்ளல்.
உள்ளம் சீர் பெறுவதற்காக சில ஆளோசனைகள்
  • தான் ஏற்றிருக்கும் மார்க்கத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களைத் தவிர்ந்துக் கொள்ளல்.
  • உள நோய்களைவிட்டும் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்.
  • பித்னாக்கள் ஏற்படக்கூடிய இடங்களை விட்டும் தூரமாகுதல்.
  • ஒவ்வொரு நாளும் தன்னை சுயபரிசோதனை செய்தல்.
  • நல்லமல்கள் புரிவதற்கு உள்ளத்துடன் போராடல்.
  • அல்லாஹ்வை வழிப்படும் விடயத்திலும், அவனுக்கு மாறு செய்யும் விடயத்திலும் பொறுமையைக் கடைபிடித்தல்.
  • படிப்பினை பெறும் நோக்கில் நல்ல மனிதர்களின் வரலாறுகளை வாசித்தல்.
  • அல்குர்ஆனை தொடர்ந்து ஓதி வரதல்.
  • உள்ளத்தை சீர் செய்யுமாறு அல்லாஹுத்தஆலாவிடம் பிரார்த்தித்தல்.
  • அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கக்கூடிய நண்பர்களைத் தெரிவு செய்தல்.
  • பாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் தன்னையே நொந்து கொள்ளல்.
  • தான் செய்த நல்லமல்களை எண்ணிப் பெருமிதமடையாதிருத்தல்.
  • எப்போதும் அல்லாஹ்வை வழிப்படும் விடயத்தில் தான் திருப்தியற்ற நிலையில் உள்ளேன் என்ற உணர்வில் இருத்தல்.
  • மரணத்தை அடிக்கடி ஞாபகப்படுத்தல்.
  • மண்ணறைகளை தரிசிக்கச் செல்லல்.
  • தவறான ஊசலாட்டங்களை விட்டும் மனதை தற்காத்துக் கொள்ளல்.
  • ஒவ்வோர் ஆத்மாவும் ஒவ்வொரு கணணொடிப்பொழுதிலும் அல்லாஹ்வின் பால் தேவையுடையதாக இருக்கின்றது என்ற எண்ணத்தை மனதில் பதித்தல்.
  • உள்ளத்திற்குப் பூரணமான மார்க்க அறிவை வழங்குதல்.
  • இம்மை மறுமை வாழ்க்கையின் எதார்த்த தன்மையைப் புரிந்து கொள்ளல்.
  • அதிகமாக திக்ர் செய்தல்.
  • பாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அதிகமாக இஸ்திக்பார் மற்றும் தவ்பா செய்தல்.
  • சிறுபாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அவற்றைத் தொடர்ந்து நல்ல காரியங்களில் ஈடுபடுதல்.
எனவே, மேற்குறிப்பிடப்பட்ட போதனைகளைக் கருத்தில் கொண்டு எம் உள்ளங்களையும் சீர் செய்து நல்ல மனிதர்களாக வாழ்ந்து ஈடேற்றம் பெறவதற்கு எனக்கும் உங்களுக்கும் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக

பெண்ணே பெண்ணே! பொறாமை வேண்டாம்! கண்ணே!

பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.
தனது சகோதரிக்கு அழகிய கணவன் கிடைத்திருக்கிறான் என்று பொறாமை கொள்ளும் பெண்கள் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர். கணவனால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருப்பர். இவர்கள் தங்களது மருமகள்களைப் பார்க்கின்றனர். தமது மகன்கள் அவர்களை அடிப்பதில்லை, தமது மருமகள் தாம் அனுபவித்த கஷடங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போது சில மாமிகளுக்குப் பொறாமை ஏற்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா?
‘நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்’ என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா
‘அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?’ (4:54)
அல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா? அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்?
நீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா?
உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்காதது உங்கள் தோழிக்கோ உறவுக்காரப் பெண்ணுக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
‘இவர்களுக்குப் பின் வருவோர், ‘எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்’ எனக் கூறுவார்கள்.’ (59:10)
இவ்வாறு துஆச் செய்து மனதில் குரோத எண்ணம் தலைகாட்டுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.
உங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள். பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும், மகிமையையும் குறைக்கும் வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள். மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடையலாமா? பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா? எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி, புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங்களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
01. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்
‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (113:5)
என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.
02. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்
‘எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்’ (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.
03. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்
‘எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ‘ (65:3)
என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
04. பொறாமைக்காரர்கள் என்ன செய்வார்களோ என்று வீணே எண்ணி, எண்ணி கவலை கொள்ளாதீர்கள். அவள் சூனியம் செய்வாளோ, வசியம் செய்வாளோ, எதையாவது மந்திரித்துத் தந்து விடுவாளோ, என் மீது உள்ள பொறாமையில் எனது மாப்பிள்ளையை வளைத்தப் பொட்டு விடுவாளோ, எனக்கும் என் கணவருக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என சும்மா போட்டு மனதை அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக செயற்படுங்கள்.
05. உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ (2:153)
என்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள். பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்.